Featured Video

Friday, August 20, 2010

ஒரு மொழியின் இறப்பு!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை.

உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. உலகில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.

"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும். ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது.

மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.

எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை.

"பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது.

எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட பூமியில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

இனிய தமிழில் பேசுவோம்!

- வி.சபேசன்

காலம் காலமாக எல்லோர் பேச்சிலும் எழுத்திலும் இருந்ததை நடைமுறைபடுத்திய தலைவன்!

பலவீனமாயிருந்த தமிழ்ச் சமூகத்துப் பெண் இனத்தின் மிகப் பலம் வாய்ந்த சக்தியாகவே பெண் போராளிகளைத் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் உருவாக்கினார். தமிழீழத்தின் கொல்லைப் புறங்களிலும் வீடுகளின் மூலையிலிருக்கும் சமையலறைகளிலும் முடங்கி, பலம்குன்றி, சிதறிக்கிடந்த பெண்களை, இன்று யாராலுமே மறுக்கவோ, மறைக்கவோ முடியாத
பெரும் சக்தியாக ஒருங்குவித்தார். எங்கள் விடயத்தில் யாருமே நம்பியிராத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். அவர் செய்த அற்புதங்கள் இனம், மொழி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவற்றிலே ஒன்று பெண்ணடிமைச் சமூகத்தில் வாழ்ந்த பெண்கள் இன்று போராடிக் கொண்டிருப்பது" ஒருவரின் கண்களிலும் படாமல் ஒதுங்கியிருந்த எம்மை உலகின் புருவம் உயரும்வரை தூக்கி நிமிர்த்த எமது தலைவர் அவர்கள் கடந்த தடைகள் கொஞ்சமல்ல. பெண்ணடிமைச் சமூகத தின் கோரப்பிடியுள் நசுங்கிக் கிடந்த பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி,
அவர்களின் கடமைகளைப் புரிய வைத்து, விடுதலை உணர்வுடன் எழுந்தவர்களை ஒன்றுசேர்த்து அணியாக்கி, அதுவரை காலமும் ஆண் போராளிகள் செய்துவந்த பயிற்சிகளையெல்லாம் செய்வித்து, ஆயுதங்களுடன் தமிழர் தெருக்களில் உலவச் செய்யலாம்,
சிங்களப் படைகளின் தலைகளைச் சீவலாம் என்று யாருமே துளிகூடக் கற்பனை பண்ணிப் பார்த்திராத காலத்தில், அதைச் செய்ய முனைந்தார் அவர்.

அந்த நேரத்திலேயே இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக இருந்த பலர்
இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்று தமக்குள்ளேயே யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்க, தலைவர் செயலிலேயே இறங்கிவிட்டார். இது சாத்தியமா என்ற ஐயப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே அது சாத்தியமாகிவிட, அதற்குமேல் அதைப்பற்றிக் கதைப்பதற்கு
வேறு என்ன இருக்கிறது?

எல்லோருக்கும் சவாலாக தலைவரின் கனவு நனவாகத் தொடங்கியது.
முதற்கட்டமாக பெண்களை அணிதிரட்டி, இந்தியாவின் திண்டுக்கல்,
சிறுமலைக் காட்டுப் பாசறை வரை கூட்டி வந்தாயிற்று.
இனி அவர்களைச் சரியான முறையில் கையாளக் கூடியவர்களை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க ஒழுங்கு செய்ய வேண்டுமேயெனச் சிந்தித்து, தானே நேரடியாகப் பயிற்சியாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார்.
அநேக பயிற்சிகளை தானே நேரடியாகக் கண்காணித்தார்.
அருகிலிருந்து சொல்லிக் கொடுத்தார்.

பலரின் கேலிக்குச் சவால் விட்டு, சமூகத்தின் வளர்ப்பு முறையால் ஒதுங்கிப்
போகின்ற இயல்பும், பிடிவாதமும் வீம்பும் கொண்ட இவர்களை உளவுரன் கொண்ட போர்வீரர்களாக வளர்த்தெடுத்ததில் முழுப்பங்கும் தலைவருடையதே. அவரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கவல்ல மூத்த போராளிகள் தலைவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் இவர்களைப் புடம் போட்டனர்.

தமிழீழ தேசிய தலைவர் ஆணை அதுவரை காலமும் இயக்கத்தில் அனைத்து உறுப்பினர்களும் எடுத்த அனைத்துப் பயிற்சிகளையுமே திறம்பட முடித்து தாயகம் திரும்பிய தேசத தின் புதல்விகள் எல்லோரினதும் கைகளிலும் ஆ-16 ரகத் துப்பாக்கிகள். அந்த நேரத்தில் மிகவும் மதிப்பான, கிடைப்பதற்கு அரிதான துப்பாக்கி அது. எல்லோருக்குமே ஆ-16 என்றால் தனி விருப்பம். தன் கண்ணருகே அல்லாமல் தூர நிற்கப் போகும் இவர்களிடமிருந்து ஆண் போராளிகள் எப்படியாவது ஆ-16ஐ வாங்க முயற்சி செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவிலேயே இவர்களிடம்,
"யார் கேட்டாலும் இதை நீங்கள் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லித்தான் அனுப்பினார். அது போல தாயகத்திலிருந்த அனைத்துப் போராளிகளுக்குமே
"யாரும் இவர்களிடமிருந்து ஆ-16ஐ வாங்கக் கூடாது" என்ற கண்டிப்பான கட்டளையொன்றையும் அனுப்பியிருந்தார். தலைவரின் அந்த ஒரு வசனமே பெண் போராளிகளின் கையில் அவர்களது ஆ-16களைத் தக்கவைக்கப் போதுமானதாகவிருந்தது.
தலைவர் அப்போது இவர்களின் அருகே இல்லை. பல கிலோ மீற்றர்களுக்கப்பால் கடல் கடந்த தூரத்திலிருந்தாலும், அவரின் ஒரே ஒரு வசனம் இவர்களின் பிரியத்துக்குரிய ஆயுதத்தை வேறு யாரும் நெருங்கிவிடாமல் பாதுகாத்தது.

மாற்றம் மலரும் காலம் 1987இல் யாழ்ப்பாணத்தில் கோட்டை,
நாவற்குழி இராணுவத்தளங்களைச் சூழவிருந்த காவலரண்கள் சிலவற்றில்
பெண் புலிகள் கடமையாற்றிக் கொண்டிருந்த நேரம் ஒரு தளபதி தன்
மனதில் நெருடிக்கொண்டிருந்ததைத் தலைவரிடம் கேட்டே விட்டார்.

"அண்ணா, பெண் பிள்ளையள் இப்படி ஜீன்ஸ், சேட்டோடை திரியிறதை யாழ்ப்பாணச் சனம் ஏற்றுக்கொள்ளாது. அவை சட்டையோடை இருந்தா என்ன?" என்றார். பெண் போராளிகள் ஜீன்ஸ், சிரித்துக் கொண்டார். அவரிடமே,
"நடைமுறைகள் மாறும்போது இப்படித்தான் விமர்சனங்கள் வரும்.
பிறகு காலப்போக்கில் பழகிவிடும்" என்றார். இதன் பின்னர் பெண்கள் பற்றிய தம் பிற்போக்கான எண்ணங்களை தலைவரிடம் சொல்ல யாருமே துணிவதில்லை. பெண் போராளிகள் விடயத்தில் அவரின்
உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயன்றனர். தற்செயலாக எமது விடயத்தில் தவறாக எதையாவது சொன்னால், செய்தால் அவரால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிவரும் என்ற அச்சத்தாலேயே அவாகள் எங்களிடம் மரியாதையுடன், மிகுந்த கவனத்துடன் பழகி, புரிந்து கொள்ள முயற்சித்தார்கள்.

காட்டுக்குள் எல்லோருமே தலைவரின் அருகில் இருந்தபோது அவர்
எம்முடன் பழகும் விதத்தை, நடத்தும் விதத்தை நேரடியாகவே
பார்த்து தாமும் நடக்க முயற்சித்தார்கள். எங்களிடம் அவருக்கு இருக்கின்ற அக்கறையைப் புரிந்து கொண்டார்கள்.

தன்னம்பிக்கையே நல்வழிப்படுத்தும் இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தில் தன் கோரக் கால்களைப் பதித்திருக்க,
தலைவர் வன்னியிலே புலிகளின் தளத்தை அமைத்து இயக்கத்தைப் பலப்படுத்தினார். அந்த நேரம் பெண் போராளிகளின் முதலாவது அணியினரும், இரண்டாவது, மூன்றாவது பாசறைகளிலே பயின்றவர்களுமாக கூடியளவிலான பெண் போராளிகள் மணலாற்றுக் காட்டினுள் தலைவருடன் பாசறை அமைத்துத் தங்கியிருந்தனர்.

தலைவரின் குடில் நடுவே இருந்தது. அதற்கு ஒருபுறம் பெண் போராளிகளின் குடில்களும், இன்னொருபுறம் ஆண் போராளிகளின் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன. இரு பாலாரும் காலைப் பயிற்சிக்காக ஓடுவதற்குத் தனித்தனி ஓடுபாதைகள் இருந்தன. ஆனால், இரண்டு ஓடு பாதைகளுமே தலைவரின் குடிலின் வாசலுக்கு நேரே வந்து சந்திக்கும். காலையில் பயிற்சிக்காக ஓடினாலும் சரி, தலைவரின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவர் எல்லோரையுமே பார்த்துக் கொண்டிருப்பார்.

தவறுகள் செய்து தண்டனையில் ஓடினால் தலைவர் கண்டுவிடுவாரே என்பதற்காகவே எம்மவர்கள் அநேக தவறுகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.
என்றாலும் எங்கேனும் நிகழும் சிறுதவறுகள் ஒருநாளுக்கு ஒருவரையாவது
அந்த ஓடு பாதைக்கு அழைத்து வந்துவிடும். தவறுகளின் வகைக்கேற்ப பாய், பானை, சட்டி, வாளி எனப் பலதரப்பட்ட பொருட்களைச் சுமந்தவாறு ஓட வேண்டியிருக்கும். தலைவரின் குடிலுக்கு நேரே ஓடிவரும்போது யாருக்குமே அவரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இராது.

ஓடி முடிந்ததும் தலைவர் கூப்பிட்டு "என்ன நடந்தது" என்று கேட்பார்.
யாரால் என்ன விட யத்துக்காகத் தண்டனை தரப்பட்டது என்பதை அவர்
முன் நின்று சொல்லி முடிப்பதற்குள் உயிரே ஒரு முறை போய் வரும்.
மறந்து போய்க்கூட அந்தத் தவறை இன்னொரு முறை செய்யமாட்டாத
அளவுக்கு அது மனதில் பதிந்துவிடும். "அண்ணாவின் அருகிலேயே நிற்கின்றோம். அவர் கண் பார்வையில் வளர்கின் றோம்" என்ற உணர்வே
எம்மை பல வழிகளில் நெறிப்படுத்தும். பிழைகளைச் செய்யவிடாது தடுக்கும்.

மலைமகள்

Monday, November 17, 2008

தமிழுக்கு அமுதென்று பேர்!